இஸ்ரேலின் 2 விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்

இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது 5 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில், சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டன.

Update: 2024-04-15 08:16 GMT

தெஹ்ரான்,

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் படையினர் சிறை பிடித்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் 2 விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன என செய்தி தெரிவிக்கின்றது. இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது 5 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில், சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டன.

இதேபோன்று, இஸ்ரேலில் நெகவ் பாலைவன பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது 4 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. எனினும், இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என ஏ.பி.சி. நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் மீது 7 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவை இடைமறித்து அழிக்கப்படவில்லை என ஈரான் தெரிவித்தது.

எனினும், 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பதிலடியை இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்