பாகிஸ்தான்: நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து - 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சுரங்கம் தோண்டும் பணியின்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.;
Image Courtesy : AFP
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சுமார் 20 தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.