ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு சம்மன்

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2022-07-30 18:41 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 2008-2018 வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

அந்த வகையில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரும் 2008-2018 இடையிலான காலக்கட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து 1600 கோடி பாகிஸ்தான் ரூபாய் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்தது. லாகூரில் உள்ள சிறப்பு கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷபாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷபாசுக்கு சம்மன் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், வெளியுறவு மந்திரி பிலாவால் பூட்டோ சர்தாரி, உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்