செக் குடியரசு நாட்டில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலி

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-12-21 21:58 GMT

Image Courtacy: AFP

பிரேக்,

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கம் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நேற்று மர்ம நபர் ஒருவர் நவீன துப்பாக்கியுடன் வந்தார். திடீரென அந்த பள்ளியில் நுழைந்த அவர் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஏராளமானோர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைகளில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். அவரை போலீசார் சுட்டுக்கொன்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதைப்போல உயிரிழந்தவர்கள் மாணவர்களா? அல்லது பொதுமக்களா? என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே பிரேக் துப்பாக்கிச் சூட்டுக்கு சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்பு இல்லை என்று அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்