புன்னகையுடன் மக்களுக்கு பணி செய்யாவிட்டால் அபராதம் - அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!!
அரசு ஊழியர்கள் மக்களுக்கு புன்னகையுடன் சேவை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.;
Image Courtesy : AFP
கியூசான்,
பிலிப்பைன்ஸ் கியூசான் மாகாணத்தில் உள்ள முலானேயில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு புதுவித வித்தியாசமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவையின் போது ஊழியர்கள் மக்களுக்கு புன்னகையுடன் பணி செய்ய வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும். இந்த உத்தரவை மீறும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிலிப்பைன்ஸ் மேயர் அரிஸ்டாட்டில் அகுயர் கூறுகையில் "மக்களுக்கு சேவை செய்யும் போது அமைதி மற்றும் நட்பு சூழ்நிலையை வெளிப்படுத்துவதன் மூலம் நேர்மையை வழங்க முடியும் " என தெரிவித்துள்ளார்.
முலானே பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களிடம் உதவி பெற வரும் உள்ளூர்வாசிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நட்பு ரீதியில் சேவை வழங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரிஸ்டாட்டில் தெரிவித்துள்ளார். இந்த புதுவித அறிவிப்புக்கு பொதுமக்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.