சத்துருவை ஜெபத்தினால் எதிர் கொள்ளுங்கள்

பலவிதமான போராட்டங்களை சத்துரு கொண்டு வந்து நம்மை வேதனைப்படுத்தி, சமாதானத்தைக் கெடுத்து, நிம்மதி இல்லாமல் குழப்பத்தோடு வாழும்படி செய்கிறான்.

Update: 2017-05-25 23:15 GMT
லவிதமான போராட்டங்களை சத்துரு கொண்டு வந்து நம்மை வேதனைப்படுத்தி, சமாதானத்தைக் கெடுத்து, நிம்மதி இல்லாமல் குழப்பத்தோடு வாழும்படி செய்கிறான். ஒருநாள் இருக்கிற சமாதானம் மறுநாள் இல்லை. சில சமயங்களில் எல்லாப்பக்கத்திலும் நெருக்கப்பட்டு அலைக் கழிக்கப்படுகிறோமல்லவா?

வேதத்தை நான் தியானித்துக் கொண்டிருக்கையில் யோசுவா 2–ம் அதிகாரத்தில் ‘யோசுவா, 31 ராஜாக்களோடு யுத்தம் பண்ணி அவர்களை முறியடித்தபின் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை பங்கிட்டு, அந்த தேசத்தில் நிம்மதியாக வாழ்ந்த சம்பவத்தை வாசித்தேன்’. அப்பொழுது எனக்குள்ளே ஒரு எண்ணம் உண்டானது.

நாம் நிம்மதியாக வாழ முடியாதபடி பலவிதங்களில் கிரியை செய்கிற 31 விதமான சாத்தானின் கிரியைகளை அடையாளம் கண்டு, அவற்றை முறியடித்தால் தான் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக் கொண்டு நிம்மதியாக வாழ முடியும். இந்த எண்ணம் என்னுள்ளத்தில் வந்தவுடன் தொடர்ந்து ஆண்டவரிடம் சத்துருவை அடையாளம் காட்டும்படி ஜெபம் பண்ணினேன். அதன் பின் ஆண்டவர் பிசாசின் தந்திரங்களை வெளிப்படுத்தி அவற்றை முறியடித்து ஜெபிக்கக் கிருபை செய்தார். நீங்களும் விசுவாசத்தோடு சத்துருவை எதிர்த்து ஜெபியுங்கள்.

அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். சத்துருக்கள் நமக்கு முன்பாக நொறுங்கிப்போவார்கள். வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களை நாம் சுதந்தரிப்போம். சந்தோ‌ஷமான ஒரு இளைப்பாறுதலை தேவன் கட்டளையிடுவார்.

ஜெபமும் உபவாசமும்

‘‘இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்’’ மாற்.9:29

பிசாசின் கிரியைகளை மேற்கொள்ள மிகமிக முக்கியம் உபவாச ஜெபம். எந்த அளவுக்கு உபவாசத்தோடு ஜெபிக்கிறோமோ அந்த அளவுக்கு பிசாசின் கிரியைகள் அழிக்கப்படும். ஜெபம் குறைய குறைய பிசாசின் கிரியைகள் அதிகரிக்கும். ஜெபம் அதிகரித்தால் பிசாசின் கிரியைகள் அழிக்கப்படும்.

எஸ்தர் நூலில் யூத ஜனங்களுக்கு விரோதமாக குறிப்பாக மொர்தெகாய்க்கு விரோதமாக ஆமான் என்ற சத்துரு எழும்பினபோது எஸ்தரும், யூதரும் உபவாசித்து ஜெபித்தார்கள். எனவே வெற்றியடைந்தார்கள். ஆமானின் திட்டங்கள் தோல்வியடைந்தது.

இப்படியே தாவீதுக்கு விரோதமாக அவனுடைய மகன் அப்சலோம் எழும்பினபோது அகித்தோப்பேல் தாவீதை அழிக்க தந்திரமாய் ஆலோசனை கொடுத்தான். ஆனால் தாவீதோ ஆண்டவரை நோக்கி, ‘‘அகித்தோப்பேலின் ஆலோசனைகளை பயித்தியமாக்கிப் போடுவீராக’’ என்று ஒரு சிறிய ஜெபம்தான் ஏறெடுத்தான். உடனே ஆண்டவர் அற்புதம் செய்து அகித்தோப்பேலின் ஆவியை முறியடித்தார்.

குடும்பத்தில் ஒரே போராட்டமும், குழப்பமுமாயிருக்கிறதா? சோர்ந்து போகாதீர்கள். உடனே குடும்பமாக ஜெபியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது உபவாசித்து ஜெபியுங்கள். இரவு நேரங்களில் அதிகமாக ஜெபியுங்கள். நிச்சயம் பிசாசு உங்களைவிட்டு ஓடிப்போவான். எந்த இடத்தில் வேதனைப்பட்டீர்களோ, உபத்திரவப்படுத்தப்பட்டீர்களோ அதே இடத்தில் ஆண்டவர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார். ‘‘நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்’’ மத். 26:41.

துதியும் ஜெபமும்

நியாயாதிபதிகள் முதல் அதிகாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ண யார் முதலில் புறப்பட வேண்டும் என்று கேட்டபோது கர்த்தர் யூதா புறப்படக்கடவன் என்றார். (நியா.1:12)

யூதா பிறந்தபோது அவன் தாயாகிய லேயாள் ‘‘கர்த்தரைத் துதிப்பேன்’’ என்று சொல்லி யூதா என்று பேரிட்டாள். (ஆதி.29:35) யூதா என்ற பெயருக்கு அர்த்தம் துதி.

பிரச்சினைகள், போராட்டங்கள், சோதனைகளை சாத்தான் கொண்டு வரும்போது துதிக்கத் துதிக்க தேவமகிமை இறங்கி வரும். சாத்தானின் கிரியைகள் அழிக்கப்படும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.

யோசபாத் ராஜாவுக்கு விரோதமாக எல்லாப் பக்கத்திலும் சத்துருக்கள் வந்தபோது யோசபாத் என்ன செய்தார் தெரியுமா? கர்த்தரை துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது என்று துதிக்க பாடகரை யுத்த வீரருக்கு முன் நிறுத்தினார். பாடகர்கள் துதிக்கத் துதிக்க நடந்தது என்ன தெரியுமா?

‘‘அவர்கள் பாடித்துதிசெய்யத்தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.’’   மிமி  .நாளா. 20:22

உங்களுக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்பும்போது துதிக்க ஆரம்பியுங்கள். பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபொழுது அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கின உடனே கட்டுகள் கழன்றது, சிறைச்சாலைக் கதவுகள் திறவுண்டது.

துதிக்க முடியாத சூழ்நிலையிலும் துதியுங்கள். நிச்சயம் அற்புதங்கள் நடக்கும். சத்துருக்கள் ஓடிப்போவார்கள். துதிக்காமல் யுத்தம் பண்ணினால் சில சேதங்கள் நமக்கு வரலாம். ஆனால் துதித்தால் சேதமில்லாமல் வெற்றியை சுதந்தரிக்க முடியும். எனவே துதியுங்கள். ஜெயம் பெறுங்கள்.

நிச்சயமாகவே ஆண்டவர் உங்களை சத்துருக்களின் முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பார்.

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’’ சென்னை– 54.

மேலும் செய்திகள்