ஜென் கதை : துயரம் இல்லாத வீடு இல்லை

பொழுது புலராத அந்த அதிகாலை வேளையில் புத்தர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

Update: 2017-08-01 00:45 GMT
பொழுது புலராத அந்த அதிகாலை வேளையில் புத்தர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது முகத்தில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சமே, காலைப் பொழுதை ஒளி மிகுந்ததாக மாற்றிக்கொண்டிருந்தது. காலை நேர அமைதியோடு, அவர் செய்த தியானத்தால் பேரமைதி அங்கு நிலவியது.

அந்த அமைதியை குலைப்பது போல் ஒரு பெண்ணின் விசும்பல் ஒலி எங்கிருந்தோ கேட்டது. புத்தரின் மனம் கலக்கம் கொள்ளத் தொடங்கியது. யாரோ ஒருவர் துயரத்தில் இருப்பது அவர் மனதை சஞ்சலப்படுத்தியது. அவரது சிந்தனை விசும்பலைப் பற்றியதாக இருந்த அதே வேளையில், அந்த விசும்பல் ஒலி மிக அருகாமையில் கேட்கத் தொடங்கியது.

புத்தர் தன் கண்களை மெல்லத் திறந்தார். அவர் எதிரே ஓர் அபலைப் பெண், கையில் ஒரு சிறுவனை ஏந்தியபடி கண்களில் கண்ணீர் மல்க நின்றிருந்தாள்.

‘என்ன?’ என்று கேட்பது போல் இருந்தது புத்தரின் அருள் விழி. அதைக் கண்டப் பெண், அவர் முன்பாக மண்டியிட்டு தானாகவே தன் துயரத்தை கூறத் தொடங்கினாள்.

‘சுவாமி! பறிகொடுத்து விட்டேன். என் வாழ்வின் ஒளி என்று நான் நினைத்திருந்த என் அன்பு மகன் மாண்டுவிட்டான். இனி நான் யாருக்காக வாழ்வது? இனி எனக்கு யார் பாதுகாப்பு?’ என்று கதறினாள்.

தொடர்ந்து வெகு நேரம், அவள் கூறிய வார்த்தைகளை யாதொரு மறுமொழியும் கூறாமல், செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார் புத்தர். அவர் முகம் சலனமின்றி, தெளிந்த நீரோடை போல் காணப்பட்டது. அவர் தனது புன்னகை இதழைப் பிரித்து, ‘இது எப்படியம்மா நிகழ்ந்தது,’ என்றார்.

‘கொடிய வி‌ஷம் கொண்ட கருநாகம் தீண்டிவிட்டது. ஒரே நாழிகையில் என் குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டது’ என்றாள்.

இப்போதும் புத்தரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ‘சரி..  நீ என்னிடம் என்ன வேண்டி வந்திருக்கிறாய் அம்மா?’ என்றார்.

‘சுவாமி! இவன் எனக்கு ஒரே மகன். எப்படியாவது இவனை உயிர்ப்பித்து தாருங்கள்’ என்றாள்.

புத்தர் தன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை இழையோட விட்டார். பின்னர் ‘அவசியம் செய்யலாம்’ என்றார்.

அதைக் கேட்டதும் அந்தத் தாயின் அழுகை சட்டென்று நின்றது. பரபரப்புடன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

புத்தர் தொடர்ந்தார். ‘உன் மகனை நிச்சயம் நான் உயிர்ப்பித்து தருகிறேன். அதற்காக நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நீ போய், இதுவரை சாவு என்பதே இல்லாத ஒரு வீட்டில் இருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிக் கொண்டு வா. அது போதும். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார்.

அவள் ஓட்டமும், நடையுமாக விரைந்தாள். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினாள்.

‘ஒரு பிடி கடுகுதானே... அவசியம் தருகிறோம்’ என்று சொன்னவர்களில் பலரும், அடுத்த கேள்வியான ‘வீட்டிலேயே ஏதாவது சாவு உண்டா?’ என்பதற்கு கதை கதையாக கூறத் தொடங்கி விட்டனர்.

‘மகன் இறந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது’

‘சென்ற வருடம் தான் என் கணவரைப் பறிகொடுத்தேன்’

‘போன வாரம் தான் என் தாய் காலமானார்’ என வீடு வீடாக ஒவ்வொரு துக்கக் கதை இருக்கவே செய்தது.

வீடு வீடாக ஏறி இறங்கிய அந்தப் பெண், இப்போது ஒரு உண்மையை புரிந்து கொண்டாள். நேராக புத்தரிடம் வந்தவள், ‘உண்மையை உணர்ந்து கொண்டேன், சுவாமி!. சாவு என்பது அனைவருக்கும் பொதுவானது. அது எல்லா வீட்டிலும் கண்டிப்பாக நுழையும் என்பதை புரிந்து கொண்டேன். இனி என் கடமையைச் செய்வேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

இப்போது புத்தரின் முகத்தில் அதே புன்னகை தளும்பியது.

மேலும் செய்திகள்