வினை தீர்க்கும் விநாயகர்

13-09-2018 விநாயகர் சதுர்த்தி

Update: 2018-09-11 10:53 GMT
உலகத்துக்கே அன்னையும் பிதாவுமாக விளங்கும் சிவன்-பார்வதியின் மூத்தமகனாக கருதப்படுபவர் விநாயகர். பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்கள் மற்றும் ஐந்தாவது கரமான தும்பிக்கையின் மூலமாக, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுவதால் மும்மூர்த்திகளும் இவருள் அடக்கம் என்கிறது விநாயக புராணம். அதன் அடிப்படையிலேயே இவரை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றோம்.

மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதை எழுதுவதற்கு தகுந்த நபராக விநாயகரை தேர்வு செய்து, மகாபாரதம் எழுதித்தர வேண்டினார்.

அதற்கு விநாயகர், ‘நீ விரும்பிய வண்ணம் நாம் எழுதுவோம். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகப்பெருமானால் எழுதப்பட்டது.

விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இருந்துள்ளது என்று கூறப்பட்டாலும், அவர் நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்கிறார் என்கிறது ஒரு புராண குறிப்பு. கிருதாயுகத்தில் காஷ்யபர்-அருந்ததி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபராயுகத்தில் பரராசமுனிவர் - வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் - பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவரது பிறப்பு நீண்டுகொண்டே வந்துள்ளது. யுகங்களை கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் கணபதியை மட்டுமே வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தகைய வழிபாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிடுவர்.

விநாயகருக்கு யானைத் தலை அமைந்ததால் வருத்தம் கொண்ட அம்பாளை, சிவன் சமாதானம் செய்தார். ‘இந்த உருவிலேயே அவன் உலகப்புகழ் பெறுவான். மக்கள் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகனை வழிபட்ட பின்னரே தொடங்குவர். காரிய தடை ஏற்படும் போதும், அதனை விலக்குமாறு அவனையே வேண்டுவர்’ என்றார்.

இன்றும் சிவனுக்கும் பார்வதிக்கும், அவர்களது இன்னொரு மகனான முருகனுக்கும் ஊர்கள் தோறும் ஆலயங்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் விநாயகருக்கு ஊர்கள் தோறும் ஆலயம் உள்ளது. அது கற்றளியாகவோ, கூரை கொட்டகையாகவோ இருக்கலாம். ஏன் சில ஊர்களில் மரத்தடியிலும் கூட இடம்பிடித்திருப்பார். இதற்கு காரணம் சிவனின் அருளாசியும் அதனடிப்படையில் மக்கள் விநாயகர் மீது கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புமே ஆகும். மேலும் இதை விநாயகரின் தனிச்சிறப்பாகவும் கூறலாம்.

‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதை கடைப்பிடிப்போர், முதலில் கட்டுவது விநாயகர் கோவில்களை தாம். ஊர்கள் தோறும் சிறிய ஆலயங்களில் தனித்து இருக்கும் விநாயகர், பெரிய ஆலயங்களில் தனி சன்னிதானத்தில் இடம் பிடித்திருப்பார். விநாயகரின் தோற்றம் ஒரு அபூர்வ வடிவமாகும். அவரது முகம் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் தோற்றத்தையும், திருவடிகள் ஞானத்தையும், பெருவயிறு எல்லாப்பொருளும் தன்னகத்தே அடக்கம் என்பதையும், கரங்கள் ஐந்தொழிலையும், கொம்புகள் அறிவிற்கு முன்னுரிமை தருவதையும், தாழ்செவிகள் கேட்பனவற்றை எல்லாம் உள் செலுத்தாதே.. சரியானதை மட்டும் தேர்வுசெய் என்பதையும் உணர்த்துகின்றன. மொத்தத்தில் தனக்கு தானே தலைவனாய் தன்னிகரின்றி விளங்குபவர், விநாயகப் பெருமான்.

விநாயகர் வழிபாடு இந்தியாவில் உருவானாலும் நேபாளம், பர்மா, ஜாவா, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, சீனா, வியட்நாம், ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் இந்துக்கள் அல்லாதவர்களாலும் வழிபடப்படுவது அதற்குரிய தனிச்சிறப்பாகக் கூறலாம்.

விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் மிக உகந்த நாளாகும். அன்றைய தினம் தான் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை செய்து வழிபடுவது வழக்கம். மஞ்சள், மண், பசுஞ்சாணம், மாவு, வெல்லம் ஆகியவற்றில் பிள்ளையார் பிடித்து ஆவாஹானம் செய்து வழிபடப்படுகின்றது. விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடுவது, சிதறு தேங்காய் உடைப்பது, அருகம்புல் சாத்துவது போன்ற வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.

விரதம் இருப்பது எப்படி?

விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராடி, களி மண் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை செய்து வைத்து அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அப்போது விநாயகர் கவசம் மற்றும் விநாயகரைப் பற்றிய துதிப் பாடல்களை பாடி வழிபட வேண்டும். மறுநாள் காலை விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், அவல், பொரி, பழ வகைகளை நிவேதனமாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.

அதன்பிறகு விரதம் இருப்பவர், முதல் நாளில் இருந்து செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கொண்டு போய் விட்டு விட்டு வந்த பின் உணவருந்த வேண்டும். அல்லது வேறு ஒருவர் மூலமாகவும், விநாயகரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூறி விட்டு விரதம் இருப்பவர் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதால், புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

ஆறுபடை வீடுகள்

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகப் பெருமானும் ஆறு படைவீடுகளைக் கொண்டுள்ளார். அவையாவன, திருநாரையூர் கோவிலிலுள்ள பொல்லாப் பிள்ளையார், திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள சித்தி விநாயகர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திலுள்ள கள்ளவாரண பிள்ளையார், திருவண்ணாமலை அல்லல் தீர்த்த விநாயகர், காசி எனப்படும் வாரணாசியிலுள்ள துண்டிராஜகணபதி ஆகியவை.

புகழ்பெற்ற ஆலயங்கள்

இந்திய அளவில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விநாயகர் கோவில்கள் புகழ்பெற்றதாக விளங்குகின்றன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள போஹ்ரா கணேஷ் கோவில், இரந்தாம்புர் கணேஷ் கோவில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மற்றும் வரதவிநாயகர் கோவில், புனே ஸ்ரீமத் டக்குஷேர்ஹால்வி விநாயகர் கோவில், கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டகணபதி கோவில், இடார்கஞ்ச் ஸ்ரீவிநாயகருதேவரு கோவில், ஹம்பி விநாயகர் கோவில், ஆந்திர மாநிலம் காணிபாக்கம் விநாயகர் கோவில், கேரளாவில் உள்ள மாத்தூர் விநாயகர் கோவில், கொட்டாரக்காரா விநாயகர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் கோவில் ஆகியவை பிரசித்திப்பெற்ற கோவில்களாகும்.

- நெய்வாசல் நெடுஞ்செழியன்


விநாயகர் வழிபாட்டு முறை


பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பழமொழியாக சொல்லுவார்கள். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.

விநாயகர் துதி

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

மேலும் செய்திகள்