பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவிழாவின் சிகர நிகழ்வாக, 9-ம் தேதி வைகாசி விசாக நாளன்று தேரோட்டம் நடைபெறுகிறது.;

Update:2025-06-03 15:39 IST

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதையடுத்து வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர் மண்டபத்தில் வைத்து விநாயகர் பூஜை, கொடிமரம், கொடிபடத்துக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 11.10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, அன்னபூரணி கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு, யானை, தங்கக்குதிரை போன்ற வாகனத்திலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை உலா நடைபெறுகிறது. 6-ம் திருநாளான 8- ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அடுத்த நாள் 9-ம் தேதி வைகாசி விசாக நாளன்று தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 6.30 மணிக்கு மங்கல இசை, பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்