சிறுவயதில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்த நடிகை பார்வதி
பெண் குழந்தைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்க வேண்டும் என பெற்றோருக்கு நடிகை பார்வதி அறிவுறுத்தினார்.;
சென்னை,
‘பூ’, ‘மரியான்’, ‘சென்னையில் ஒருநாள்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி. மலையாள சினிமாவிலும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அடிக்கடி பரபரப்பு கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் பார்வதி, இந்தமுறை தனது சிறுவயதில் நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பேசிய அவர், “சிறுவயதில் ஒருமுறை பெற்றோருடன் ரெயில் நிலையத்துக்கு சென்றிருந்தபோது, யாரென்று தெரியாத ஒருவர் என் நெஞ்சில் கைவைத்து சென்றார். அது சாதாரணமாக தடவியது போல இல்லாமல், அடித்தது போல வலித்தது. அந்த சம்பவம் எனக்கு மிகவும் அசவுகரியமாக இருந்தது” என்று தெரிவித்தார்.
மேலும், “சிறுவயதில் இதுபோன்ற அனுபவங்களை பலமுறை சந்தித்தேன். ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதே அப்போது எனக்குப் புரியவில்லை. ஆனால் வளர வளர, நம்முடைய உடல் குறித்து அதிக கவனத்துடன் இருக்கவும், பொதுஇடங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் வேண்டும் என்பதை உணர்ந்தேன்” என்றும் கூறினார். இதனுடன், பெண் குழந்தைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்க வேண்டும் என பெற்றோருக்கு நடிகை பார்வதி அறிவுறுத்தினார்.