’ஜனநாயகன்’ - முழு படமும் ரீமேக் இல்லை...'பகவந்த் கேசரி' பட இயக்குனர்
’ஜனநாயகன்’ தமிழ் ரசிகர்களுக்கு புதிய கதைக்கள அனுபவத்தை வழங்கும் என்று அனில் ரவிபுடி கூறினார்.;
சென்னை,
2015-ம் ஆண்டு ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனில் ரவிபுடி. தொடர்ந்து ‘சுப்ரீம்’, ‘ராஜா தி கிரேட்’, ‘பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் 2’, ‘சரிலேரு நீக்கெவரு’, ‘பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் 3’, ‘பகவந்த் கேசரி’, ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ உள்ளிட்ட 8 படங்களை அவர் இயக்கியுள்ளார்.
இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கிய இந்த அனைத்து திரைப்படங்களும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, அதிக வசூல் ஈட்டி வெற்றிபெற்றன. அந்த வரிசையில், அவரின் ஒன்பதாவது திரைப்படமாக ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’ இன்று வெளியாக உள்ளது. அனில் ரவிபுடி இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகிய திரைப்படமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது ‘ஜனநாயகன்’ படம் குறித்து அனில் ரவிபுடி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் அடிப்படை கதையம்சங்களான முதல் 20 நிமிடங்கள், இடைவேளை பகுதி மற்றும் இரண்டாம் பாதியின் சில பகுதிகளை ரீமேக் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வில்லன் கதாபாத்திரம் முழுமையாக மாற்றப்பட்டு, ரோபோ அறிவியல் புனைகதை அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது தமிழ் ரசிகர்களுக்கு புதிய கதைக்கள அனுபவத்தை வழங்கும் என்றும், விஜய் சாரின் கடைசிப் படம் என்பதால் அது அனைத்து சாதனைகளையும் தகர்க்கும் என்றும் அனில் ரவிபுடி தெரிவித்தார்.