"கிங்ஸ்டன்" படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த “கிங்ஸ்டன்” படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-02-07 17:42 IST

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம். இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி தொடங்கி வைத்தார். கடல் பின்னணியில் திகில் சாகச படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.

'கிங்ஸ்டன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் "கிங்ஸ்டன்" படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த டப்பிங் பணியின் போது எடுத்த புகைப்படத்தை ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்