தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது
ஆஷாட நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று விஷேச அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
தஞ்சை பெரிய கோவிலில் 23-வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா இன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதன்பின்னர், வராகி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாலை ஆஷாட நவராத்திரி முதல் நாள் விஷேச அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் அலங்காரமும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) குங்கும அலங்காரமும், 28-ந்தேதி சந்தன அலங்காரமும், 29-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 30-ந்தேதி மாதுளை அலங்காரமும் அம்மனுக்கு செய்யப்படுகிறது.
ஜூலை 1-ந்தேதி நவதானிய அலங்காரதிலும், 2-ந்தேதி வெண்ணெய் அலங்காரத்திலும், 3-ந்தேதி கனிவகை அலங்காரத்திலும், 4-ந்தேதி காய்கறி அலங்காரத்திலும், 5-ந்தேதி புஷ்ப அலங்காரத்திலும் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை வாணவேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வராகி அம்மன் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் வீதிஉலா காட்சியும் நடைபெறுகிறது.