நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார்: டி.கே.சிவக்குமார்
கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.;
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழி குறித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்கும்படி ஐகோா்ட்டு கூறியுள்ளது. அதனால் அவர் ஐகோர்ட்டை மதித்து நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன். மாநிலத்தின் நலன், மொழியின் நலன் காக்க வேண்டும். நமது இலக்கியவாதிகளுடன் பேசினேன். நாம் திராவிட பகுதியை சேர்ந்தவர்கள். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை.
அனைத்து மொழிகளும் ஒன்றாக வந்துள்ளது. கன்னடத்தில் சில தெலுங்கு வார்த்தைகள் உள்ளன. தமிழ், மலையாளத்திலும் கன்னடம், தெலுங்கு வார்த்தைகள் கலந்துள்ளன. நம்மவர்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். போராட்டங்களை நடத்தியுள்ளோம். கோர்ட்டு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை. மொழி, சாதி, மாநிலங்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்த முடியுமா?. பா.ஜனதாவினர் எப்போதும் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். நாங்கள் ஒன்றுபடுத்துபவர்கள். அவர்கள் கத்திரிக்கோல், நாங்கள் ஊசி. ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?. இவ்வாறு அவர் கூறினார்.