நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.;
டெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும், குறிப்பாக மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் ஓட்டு போட்டதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. பேரணியை தடுத்து நிறுத்தி போலீசார், ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை கைது செய்தனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றதால் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்று மத்திய மந்திரியும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரியுமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தினமும் நாட்டின் நேரமும், நாடாளுமன்றத்தின் நேரமும் ஒரே விவகாரத்திற்காக வீணடிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ஆகையால், நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நாங்கள் நிறைவேற்றப்போகிறோம்.
முக்கியமான மசோதாக்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. ஒரே ஒரு குறிப்பிட்ட விவகாரத்திற்காக மட்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நீங்கள் ஒரு பிரச்சினையை எழுப்புகிறீர்கள். அதற்கு ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதே பிரச்சினையை ஒவ்வொரு நாளும் எழுப்புவதால் என்ன பயன். வருமான வரி மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, வணிக கப்பல் மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதா, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ளன. முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தி இரு அவைகளிலும் நிறைவேற்றுவோம்
இவ்வாறு அவர் கூறினார்.