கலெக்டர் அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பு

காவிரி நீர் பங்கீட்டினை உரிய காலத்தோடு பெற்றுத்தரக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-28 16:16 GMT

காரைக்கால்

காவிரி நீர் பங்கீட்டினை உரிய காலத்தோடு பெற்றுத்தரக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி நீர் பங்கீடு

காரைக்கால் மாவட்ட அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் சம்பா பருவ சாகுபடி பணியினை உழவர்கள் தொடங்க உள்ளபடியால் காரைக்கால் மாவட்டத்திற்கான காவிரி நீர் பங்கீட்டினை உரிய காலத்தோடு பெற்றுத்தர புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வரவேண்டும். புதுச்சேரி முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட விவசாயிகளது கூட்டுறவு கடன் தள்ளுபடிக்கான ஆணையை உடனே வெளியிடவேண்டும். நடப்பு சம்பா பருவ சாகுபடி பணி மேற்கொள்ள காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் கொடுப்பதை உறுதி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

இதற்கு அகில இந்திய விவசாய சங்க தலைவர் முத்துகுமரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அகில இந்திய விவசாய சங்க தலைவர் துரைராஜ், புதுச்சேரி மாநில தலைவர் வின்சென்ட், செயலர் சங்கர், காரைக்கால் மாவட்ட செயலாளர் தமீம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

முற்றுகையிட முயற்சி

பின்னர் காரைக்கால் மதகடி பாலத்திலிருந்து அகில இந்திய விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தூரத்தில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போரட்டத்தில், பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீடுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்