அரசு ஊழியர்கள் இடமாற்றத்தை பின்பற்ற வேண்டும் : கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்

அரசு ஊழியர்கள் இடமாற்றத்தை பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2023-10-18 18:54 GMT

புதுச்சேரி

அரசு ஊழியர்கள் இடமாற்றத்தை பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தீவிரவாதம்

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நடக்கிறது. இஸ்ரேலில் புதுவை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. அங்குள்ள இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துக்கள் நடந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. சிவகாசியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையை உருவாக்க வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதிலும், கையாளுவதிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கவர்னர் மாளிகைக்கு வரும் கோப்புகளுக்கு உரிய ஆலோசனை நடத்தை உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் இடம் மாறுதல்கள் செய்யும்போது அந்தந்த இடங்களுக்கு செல்வது கிடையாது. மீண்டும் தாங்கள் பணி செய்த இடங்களுக்கே திரும்பி விடுகிறார்கள். குறிப்பாக அரசு ஊழியர்கள் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய பகுதிகளுக்கு செல்வது கிடையாது. காரைக்காலில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஊழியர்கள் இடமாற்றத்தை பின்பற்ற வேண்டும்.

மாணவர்களை தூண்டிவிட...

புதிய கல்விக் கொள்கையின் உண்மை நிலையை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிலரின் தூண்டுதலின் பேரில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி புறக்கணிக்கப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் இதற்கு எதிராக போராட வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து. மாணவர்கள் போராட்டத்தை தவிர்த்து நன்றாக படிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக மாணவர்களை யாரும் தூண்டி விட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்