'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை காமராசர் அரங்கத்தில் 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளியிடப்படுகிறது.;

Update:2025-07-09 15:33 IST

சென்னை,

வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். வரும் ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குச் சென்னை காமராசர் அரங்கத்தில் நூல் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவுக்குத் தலைமையேற்று நூலை வெளியிடுகிறார்.

இந்தியப் பேரரசின் முன்னாள் நிதியமைச்சரும் மற்றும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி நூலின் முதற்படியைப் பெற்றுக்கொள்கிறார். தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் மற்றும் தமிழ்ப் பேராசிரியர் பர்வீன் சுல்தானா இருவரும் வாழ்த்திப் பேசுகிறார்கள். நிறைவாக கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.

திருக்குறளுக்குக் காலந்தோறும் உரை எழுதப்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தாம்கற்ற கல்வி - சார்ந்த கொள்கை - சமுதாயச் சூழலுக்கு ஏற்ப உரையாசிரியர்கள் உரை எழுதி வந்திருக்கிறார்கள். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதியார், பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் பிற்காலத்தில் வ.உ.சிதம்பரனார், திரு.வி.கல்யாணசுந்தரனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், ஞா.தேவநேயப் பாவாணர், நாமக்கல் கவிஞர், மு.வரதராசனார், புலவர் குழந்தை, சி.இலக்குவனார், கலைஞர், நாவலர் என்று பலரும் உரை எழுதியிருக்கிறார்கள்.

தாம் எழுதிய உரை மாறுபட்டது என்று கவிஞர் வைரமுத்து தெரிவிக்கிறார். அறவியலுக்காக எழுதப்பட்ட திருக்குறளுக்கு அறிவியலின்படி உரை எழுதியிருப்பதாக அறிவிக்கிறார். இது டிஜிட்டல் தலைமுறைக்கானது; மின்னல் தெறிக்கும் மொழியில் எழுதப்பட்டது; எளிமையும் துல்லியமும் உடையது; பண்டிதரையும் பாமரரையும் ஒருசேரச் சென்றடைவது. அறத்துப்பாலும் பொருட்பாலும் ஞானத் தமிழில் எழுதப்பட்டது; இன்பத்துப்பால் கவிதை மொழியில் எழுதப்பட்டது என்கிறார் கவிஞர் வைரமுத்து.

மூலத்தைவிடப் பல உரைகள் கடினமாக இருக்கின்றன என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால், இது இலகுவான மொழியில் கவிதை கொஞ்சும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதனால் எவரும் படிக்க இயலும். ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் இந்நூல் இருக்க வேண்டும் என்பது தன் இலக்கியக் குறிக்கோள் என்கிறார் கவிஞர் வைரமுத்து. '12 வயதில் நான் கண்ட கனவு 72 வயதில் நனவாகி இருக்கிறது' என்று சொல்லும் கவிஞர் வைரமுத்து, என் பிறவிப் பெரும்கடமை நிறைவேறி இருக்கிறது என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்