தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்
ஆயுதப்படை வளாகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.;
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மூலம் முன்னெடுக்கப்பட்ட பிட்னஸ் சேலஞ்ச் (fitness challenge) என்ற தலைப்பில் பங்கெடுத்த நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று மூன்றாம் கட்ட முழு உடல் பரிசோதனை முகாம் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.
மேற்சொன்ன சவாலில் கலந்து கொண்டு உடல் நலத்தை பேணிக்காத்து வரும் 40-க்கும் மேற்பட்ட நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களின் முதல் மாத உடற்பயிற்சி மதிப்பாய்வுக்கான மருத்துவ முகாம் கடந்த 29.3.2025 அன்றும், இரண்டாம் மாத உடற்பயிற்சி மதிப்பாய்வுக்கான மருத்துவ முகாம் கடந்த 3.5.2025 அன்றும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்ட மதிப்பாய்விற்காக தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நேற்று (14.6.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தலைமையில், தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் முன்னிலையில், தூத்துக்குடி கணேஷ்நகர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பாக முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் டாக்டர் ரசுல் தலைமையிலான மருத்துவ ஊழியர்கள் மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, உயரம், எடை போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு முழு உடல் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி., தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மற்றும் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன் ஆகியோரும் முழு உடல் பரிசோதனை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. மேற்சொன்ன மருத்துவ முகாமில் கலந்து கொண்ட நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களிடம் காவல் நிலைய பணிகள் குறித்தும், குறை நிறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.