திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கோர்ட்டு தடை

மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த அனுமதியின் பேரில் ஊர்மக்கள் சார்பாக உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.;

Update:2026-01-27 16:45 IST

மதுரை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஐகோர்ட்டு மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மனுதாரரான ராமரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் திருப்பங்குன்றம் சென்றனர். முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோயில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை அங்கு போலீசார் தடுப்பு வேலிகளை போட்டு மறைத்து அனுமதி மறுத்தனர்.

இதனை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறியும் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர். அப்போது திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, தடுப்பை மீறி மலை பாதையில் ஓடி சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர்.

மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிகப்பட்டது.  இந்த சூழலில், டிசம்பர் மத்தியில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த அனுமதியின் பேரில் ஊர்மக்கள் சார்பாக உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி போராட்டம் நடத்திய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்