திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்; தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கனிமொழி கூறினார்;
தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட திமுக சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் ரீனா மித்ரா மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கேட்டு அறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில், டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, எம்.எம்.அப்துல்லா, எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., சுரேஷ் குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்தனர். மேலும், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழா மேடையில் பேசிய கனிமொழி எம்.பி, எல்லாருக்குமான ஒரு ஆட்சியை, அனைவரையும் அரவணைக்கக்கூடிய ஒரு ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமான திட்டங்களை ஒவ்வொரு நாளும் வகுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே அந்தத் திட்டங்களை நிறைவேற்றி, அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும். இந்தத் திட்டங்கள் தொடர வேண்டும் என்ற காரணத்திற்காக, மக்களுக்கு இன்னும் என்ன தேவை இருக்கிறது என்பதை அறிய, இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம், மக்களைத் தேடிச் சென்று, அவர்களைச் சந்தித்து, அவர்களுடைய கருத்துக்களை கேட்டு, இந்தத் தேர்தல் அறிக்கையை மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களைப் பணித்திருக்கிறார்கள்.
உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை என்பது எப்பொழுதுமே எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு தேர்தல் அறிக்கை. ஏனென்றால், அந்தத் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொல்லக்கூடிய அத்தனையையும் நிறைவேற்றிக் காட்டக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். “நாங்கள் சொல்வதை செய்வோம்; செய்வதை மட்டுமே சொல்வோம்” என்ற கொள்கையில் செயல்பட்டு வரும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
அதனால், உங்களைச் சந்தித்து, உங்களுடைய கருத்துக்களை இணைத்து, உங்களுடைய தேர்தல் அறிக்கையாக நாம் ஒன்றாக தயாரிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தத் தேர்தல் அறிக்கை குழு இன்று உங்களைச் சந்திக்க வந்திருக்கிறது. உங்கள் கருத்துகளையும், கோரிக்கைகளையும், நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ‘TN Manifesto’ என்ற ஒரு போர்டல் இருக்கிறது. tnmanifesto.ai என்ற அந்தப் போர்டல் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியது. அந்தப் போர்டலுக்குள் சென்று, உங்கள் கருத்துகளை எழுதி பதிவு செய்யலாம். அல்லது, உங்கள் கருத்துகளை வாய்மொழியாக பகிர்ந்து கொண்டாலும், அவை எங்களிடம் வந்து சேரும் வகையில் அந்த அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, இன்று இந்தக் கூட்டத்தில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியாதவர்கள் கூட, இந்தப் போர்டல் வழியாக தங்களுடைய கருத்துகளை எங்களோடு அவசியமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக, தேர்தல் அறிக்கை குழுவை முதலமைச்சர் அமைத்து அனுப்பியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ஓசூருக்கு இந்தத் தேர்தல் அறிக்கை குழு சென்று, அங்கு உள்ள அலைபேசி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து, அவர்களுடைய கருத்துகளை கேட்டறிந்தோம்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள், வியாபாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கேட்டு அறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டோம்.
இன்று மாலை திருச்சியில் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு பகுதியாகச் சென்று, அங்கு வாழும் மக்களை நேரில் சந்தித்து, இந்தத் தேர்தல் அறிக்கையை மக்களுடைய தேர்தல் அறிக்கையாக உருவாக்குவதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
அ.தி.மு.க. தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். ஆனால், மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது என்று. நிச்சயமாகத் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
நாங்கள் வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதையும் மக்கள் நன்றாக அறிவார்கள். அதுமட்டுமல்லாமல், அடுத்த ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள்தான். ஆகையால், தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றப்போவதும் நாங்கள்தான்.
கடந்த 2006-ஆம் ஆண்டு, தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்கப்பட்டது. இந்த முறை, தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக, தி.மு.க. அரசு தொடர்ந்து போராடி வருகிறது. நிச்சயமாக, ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, இந்த விவகாரத்தில் நாங்கள் சொல்லக்கூடிய நிலையில் இருந்து, தேவையான மாற்றங்களை எங்களால் கொண்டு வர முடியும். அதுவரை, நீதிமன்ற வழிமுறைகளையே நாம் நாட வேண்டியிருக்கிறது. அதேபோல், மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் மேலும் மதுக்கடைகள் மூடப்படும்.
நேற்று தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற மகளிர் அணி மாநாட்டில், சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், மாநாட்டுப் பந்தலுக்குள் கூட வர முடியாத அளவுக்கு பெண்கள் பெருந்திரளாக அந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதன் மூலம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆட்சியாகவும் செயல்பட்டு வருகிறது என்பதைக் தெளிவாகக் காட்டுகிறது. அதனாலேயே பெண்கள் எங்களுடைய பக்கத்தில் உறுதியாக நிற்கிறார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது என்று பதிலளித்தார்.