மூத்த தம்பதிகளுக்கு கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டம் - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மூத்த தம்பதிகளுக்கு கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து 200 தம்பதியினருக்கு சிறப்பு செய்தார்.;
முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்." என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்டையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை இன்று (10.11.2025) தொடங்கி வைத்து, 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார்.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 2,000 மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுகின்றனர். இத்தம்பதியினருக்கு 2,500 ரூபாய் மதிப்பிலான வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்-அமைச்சர் கூறியதாவது:-
சென்னை மண்டலங்களில் 200 மூத்த தம்பதிகளுக்கும், இதர மண்டலங்களிலிருந்து 631 மூத்த தம்பதிகள் என மொத்தம் இன்றைக்கு மட்டும் 831 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளுக்கு ரூபாய் 2,500 மதிப்பிலான புத்தாடைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் எல்லாம் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் கலந்து கொள்வதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த நிகழ்ச்சி நம்முடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெறுகின்றது. அதுமட்டுமல்ல 200 மூத்த ஜோடிகளில் 18 ஜோடிகள் நம்முடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்தவர்கள். இங்கே நான் ஒரு துணை முதல்-அமைச்சராக வரவில்லை. உங்கள் பேரப்பிள்ளையாக வந்து உங்களுடைய வாழ்த்தை வாங்க வந்திருக்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியில் நான் பேசுவதாக இல்லாமல் இருந்தது. ஆனால் இங்கு வந்து நான் பேசாமல் சென்றால் பேரன் வந்தானே பேசாமல் போய்விட்டானே என்று தாத்தா பாட்டிகளுக்கு கோபம் வந்துவிடும். நான் வாழ்த்த வரவில்லை, வாழ்த்துகளை பெற வந்திருக்கின்றேன். வந்திருக்கக்கூடிய மூத்த தாத்தா பாட்டிகளுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து இந்த சிறப்பான வாய்ப்பை அளித்த அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் சார்பில் திருவல்லிக்கேணி, நல்லதம்பி தெருவில் 2.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை ஆணையர்/செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்புகளையும், பார்த்தசாரதி தெருவில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பினையும் திறந்து வைத்து வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.