இலங்கை கடற்படையினர் கைது செய்த தரங்கம்பாடி மீனவர்களை மீட்க வேண்டும் - மு.வீரபாண்டியன்

கடந்த 8ம் தேதி கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.;

Update:2025-11-10 18:31 IST

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அந்த ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தை வேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராபின் மற்றும் ராஜ்குமார் ஆகிய 14 மீனவர்கள் கடந்த 3 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஜெகதாபட்டினம் அருகில் மீன்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த போது, படகு பழுதடைந்துள்ளது. பழுதடைந்த படகை சீர்படுத்தி கொண்டு, 08.11.2025 ஆம் தேதி மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளனர். கடலுக்குள் சென்ற படகு மீண்டும் பழுதடைந்து தமிழக எல்லையில் தத்தளித்து நின்றுள்ளது.

இந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 14 பேரையும் கைது செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வதும், தாக்குதுவதும், அவர் வசம் இருக்கும் பொருட்களை பறிமுதல் செய்வது, பறிமுதல் செய்த பொருட்கள் இலங்கைக்கு சொந்தமானது என அபகரித்துக் கொள்வதுமான அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரும், மீனவர் அமைப்புகளும் கடிதங்கள் வாயிலாக தொடர்ந்து வற்புறுத்தி வரும் போதும், மத்திய அரசும், அயலுறவுத்துறை அமைச்சகமும் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்கிறது. மத்திய அரசு அலட்சியப் போக்கை கைவிட்டு, இலங்கை கடற்படையினரால் கைது செய்து, கொண்டு செல்லப்பட்ட தரங்கம்பாடி மீனவர்களை விடுவித்து கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்