10 மணி வரை சென்னையில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது;
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.
சென்னையில் அதிகபட்சமாக துரைப்பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. துரைப்பாக்கத்திற்கு அடுத்ததாக மடிப்பாக்கத்தில் 18 செ.மீ., பள்ளிக்கரணை, பாரிஸ், அடையாரில் 17 செ.மீ., ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நள்ளிரவு முதல் சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என்பதால் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருபத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.