ஒழுக்கமின்மை காரணமாக வேட்பாளரை நீக்கிய பகுஜன் சமாஜ் கட்சி

ஜான்சி மக்களவை தொகுதி வேட்பாளர் ராகேஷ் குஷ்வாகாவை பகுஜன் சமாஜ் கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது.

Update: 2024-04-18 13:21 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி மக்களவை தொகுதியில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக ராகேஷ் குஷ்வாகா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ராகேஷின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராகேஷ் தனது பணியில் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் கட்சி தலைமை அவரை எச்சரித்த பிறகும் அவரது செயல்பாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜான்சி மக்களவை தொகுதி வேட்பாளர் ராகேஷ் குஷ்வாகாவை பகுஜன் சமாஜ் கட்சி இன்று அதிரடியாக நீக்கியுள்ளது. ஒழுக்கமின்மை மற்றும் கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜான்சி மாவட்ட பகுஜன் சமாஜ் தலைவர் ஜெய்பால் அகிர்வார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பி.கே.கவுதம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்