ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது; அதிக அளவில் வாக்களியுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-05-25 02:05 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது; அதிக அளவில் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் 6-வது கட்டமாக வாக்களிக்கும் அனைவரையும் அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, உங்களுடைய வாக்கை செலுத்துங்கள்! மக்கள் தேர்தல் பணியில் ஈடுபடும்போதும், செயல்படும்போதும் ஜனநாயகம் செழிக்கிறது. குறிப்பாக பெண் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்