விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா..? - தேர்தல் கமிஷன் விளக்கம்

சட்டரீதியான, நீதித்துறை நடைமுறைகளை மீறக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுப்பது சரி என்று நாங்கள் கருதவில்லை. என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது

Update: 2024-04-16 20:39 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய விசாரணை அமைப்புகள் ஊழல் வழக்குகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. டெல்லி ராமலீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தின. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் விசாரணை அமைப்புகளுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தேர்தல் கமிஷன் நேற்று பதில் அளித்தது. தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குற்றவியல் விசாரணை அடிப்படையில், கோர்ட்டுகளின் உத்தரவுகள் மற்றும் தீவிர பரிசீலனையில் உள்ள அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசியல் சட்ட வழிகாட்டுதலுடன் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.

சமமாக போட்டியிடும் வாய்ப்பை பாதுகாப்பதற்கும், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரசார உரிமையை பாதுகாப்பதற்கும் தேர்தல் கமிஷன் உறுதி பூண்டுள்ளது. அதே சமயத்தில், சட்டரீதியான, நீதித்துறை நடைமுறைகளை மீறக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுப்பது சரி என்று நாங்கள் கருதவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்