'ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் மக்கள் பங்கேற்க வேண்டும்' - சோனியா காந்தி

ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் மக்கள் பங்கேற்க வேண்டும் என டெல்லி வாக்காளர்களிடம் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2024-05-23 15:36 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 25-ந்தேதி, 6-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் டெல்லி வாக்காளர்களிடம் 'இந்தியா' கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வாக்களிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது;

"இது மிகவும் முக்கியமான தேர்தல். நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான தேர்தல். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறோம். ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் நீங்கள் பங்கேற்க வேண்டும்.

உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும், பணவீக்கத்தைக் குறைக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும், பொன்னான எதிர்காலத்தைக் கொண்ட சமமான இந்தியாவை கட்டியெழுப்பும்.

டெல்லியின் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்