வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பாகூர்

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சாலையை கடக்க முயன்றபோது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நடுப்பேட்டு குப்பத்தைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 60). அவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று இவர் காட்டுகுப்பத்திலிருந்து கடலூர்- புதுச்சேரி ரோட்டை கடக்கும்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த நிர்ணயப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரும் காயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஜோதி மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு ரோடு ஆண்டியார்பாளையம்பேட் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 57). கூலித்தொழிலாளி. அவரது மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று செல்வம் தவளக்குப்பம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே புதுச்சேரி-கடலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்தகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த 2 விபத்துகள் குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story