குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை


குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை
x

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தை தொழிலாளர் தினம்

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்கு சட்டம் 1986-ன் கீழ் தக்க நடவடிக்கைகள் எடுத்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதையொட்டி உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் நாளை (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

எனவே குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க இன்று முதல் வருகிற 16-ந் தேதி வரை தொழிலாளர் அதிகாரி நலத்திட்டங்கள் அலுவலகம், தொழிற்சாலை ஆய்வாளர்கள் மற்றும் உதவி தொழிலாளர் ஆய்வாளர்களை கொண்ட சிறப்பு ஆய்வு நடத்தப்படும்.

சிறை தண்டனை

14 வயதிற்கு உள்பட்ட குழ்ந்தைகளை பணி அமர்த்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் 14 முதல் 18 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினரை சுரங்கங்கள், தீ பிடிக்கக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய, ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துதல் குற்றமாகும். மீறினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

பிரிவு 12-ன் படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட சட்டப்பிரிவுகள் 3-ஏ மற்றும் 14-ன் சாராம்சத்தின் அறிவிப்பை பணியிடத்தில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இந்த அறிவிப்பை வைக்க தவறுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு மாதம் வரை சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

குழந்தைகளுக்கு கல்வி அறிவை புகட்டுதல் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை அடியோடு ஒழிக்க முடியும். மேலும் குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் பற்றி பொதுமக்கள் புகார் செய்ய புதுச்சேரி காந்தி நகர் வழுதாவூர் சாலையில் தொழிலாளர் துறை வளாகத்தில் 2-வது தளத்தில் உள்ள தொழிலாளர் அதிகாரி நலத்திட்டங்கள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0413-2277780 தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story