நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி


நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
x

மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியபோது பலத்த காற்று, அலை சீற்றத்தால் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.

கோட்டுச்சேரி

மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியபோது பலத்த காற்று, அலை சீற்றத்தால் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.

படகு கவிழ்ந்தது

காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 33). மீனவர். திருமணமாகாதவர். இவர் அதே கிராமத்தை சேர்ந்த வீரபிரதாப் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் வீரமணி என்பவருடன் நேற்று மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

காரைக்கால்மேடு கடற்கரைக்கு கிழக்கே 4 மைல் தொலைவில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பினர். அப்போது வீசிய பலத்த காற்றில் படகு தத்தளித்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் திகைத்தனர். பலத்த காற்றும் மற்றும் அலை சீற்றம் காரணமாக நடுக்கடலில் படகு தலைகுப்புற கவிழ்ந்தது.

உடல் கரை ஒதுங்கியது

இதில் மீனவர்கள் 2 பேரும் கடலில் விழுந்தனர். வீரமணி, தண்ணீரில் நீந்தி கவிழ்ந்த படகின் மீது ஏறி உயிர்தப்பினார். ஆனால் ஞானப்பிரகாசம் மாயமானார். அவரை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அந்த வழியாக படகில் வந்த மீனவர்கள் உதவியுடன் வீரமணி கரைக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் மீனவர்களிடம் ஞானப்பிரகாசம் மாயமானது குறித்து தெரிவித்தார். உடனே மீனவர்கள் 4 படகுகளில் கடலுக்குச் சென்று தேடினர். ஆனால் ஞானப்பிரகாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று இரவு காரைக்கால்மேடு கடற்கரை பகுதியில் ஞானப்பிரகாசம் உடல் ஒதுங்கியது. படகில் இருந்து தவறி விழுந்த அவர் கடலில் மூழ்கி மூச்சு திணறி பலியானது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த மீனவர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஞானப்பிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story