முன் ஜாமீன் கிடைக்காததால் முதியவர் தற்கொலை


முன் ஜாமீன் கிடைக்காததால் முதியவர் தற்கொலை
x

கோட்டுச்சேரி அருகே முன் ஜாமீன் கிடைக்காததால் முதியவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் புஜ்ஜிக்குமார் என்ற மாரிமுத்து (வயது 53). இவர் கடந்த 29-ந் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சாப்பாடு தர கால தாமதம் செய்ததால் மனைவி மாலதியை தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். தடுக்க முயன்ற மகள்கள் மீரா (27), பிரியா (24) ஆகியோரையும் தாக்கினார். மேலும் மூத்த மகள் மீராவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க மாரிமுத்து முன்ஜாமீன் பெற முயற்சி செய்தார்.

ஆனால் முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்து மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். நேற்று தனது மூத்த மகள் மீராவின் வீட்டுக்கு மாரிமுத்து சென்றுள்ளார். முன் ஜாமீன் கிடைக்காததால் மனமுடைந்த அவர் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story