திருமணம் ஆன 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
திரு.பட்டினத்தில் திருமணம் ஆன 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திரு.பட்டினம்
திரு.பட்டினத்தில் திருமணம் ஆன 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரோமாபுரி பகுதியைச்சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் பஞ்சாயத்து போர்டு டேங்க் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷர்மி நிஷாந்தினி (வயது19). இவருக்கும், காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த பிரின்ஸ் கிளிண்டன் (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் ஆனது.
திருமணத்திற்கு பின் கணவர் வீட்டிலேயே ஷர்மி நிஷாந்தினி வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார். தந்தை என்னவென்று விசாரித்தபோது, கணவர் குடித்துவிட்டு அடித்துவிட்டதாக கூறினார். பின்னர் காரைக்கால் சென்று விட்டார்.
தூக்குப்போட்டு சாவு
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், அவர் தந்தைக்கு போன் செய்து, கணவர் தினமும் குடித்துவிட்டு அடித்து கொடுமைச் செய்வதாக கூறியுள்ளார். நான் வந்து கேட்கிறேன் என தந்தை கூறியபோது, வேண்டாம். நானே பார்த்து கொள்கிறேன். கணவரை திருத்திவிடுகிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஷர்மி நிஷாந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துகொண்டதாக தந்தை ஆரோக்கியராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், தனது உறவினர்களுடன் திரு.பட்டினம் சென்று விசாரித்துள்ளார். 1-ந் தேதி இரவு 11 மணிக்கு கணவர், மனைவி இடையே சண்டை நடைபெற்றதாகவும், அந்த கோபத்தில், ஷர்மி நிஷாந்தினி தனி அறையில் படுத்து தூங்கிவிட்டதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியதாகவும் தெரியவந்தது.
சாவில் சந்தேகம்
இது குறித்து திரு.பட்டினம் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரோக்கியராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருமணம் ஆகி 8 மாதத்திலேயே அப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் விசாரணையும் நடந்து வருகிறது.