காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்கருத்து: சந்திரசேகர ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை


காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்கருத்து: சந்திரசேகர ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை
x

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்கருத்து தெரிவித்த சந்திரசேகர ராவ் பரப்புரை செய்ய 48 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.

இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் வரும் 13ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 5ம் தேதி சிர்சிலா பகுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்களை 'நாய்களின் மகன்கள்' என கூறி விமர்சனம் செய்தார்.

சந்திரசேகர ராவின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. மேலும், சந்திரசேகர ராவ் குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்தது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி சந்திரசேகர ராவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை சந்திரசேகர ராவ் மீறியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் 48 மணிநேரத்திற்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story