ஜெய்பீம் படத்துக்கு ஆதரவு: சரத்குமார், சூரி, சீமான் உள்ளிட்டோருக்கு சூர்யா நன்றி


ஜெய்பீம் படத்துக்கு ஆதரவு: சரத்குமார், சூரி, சீமான் உள்ளிட்டோருக்கு சூர்யா நன்றி
x
தினத்தந்தி 18 Nov 2021 5:42 AM GMT (Updated: 18 Nov 2021 5:42 AM GMT)

ஜெய்பீம் படத்தை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்தவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றியை தெரிவித்துள்ளார்.

சென்னை,

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில்  மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், இந்தப் படத்திற்கு பா.ம.க தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

மேலும், சினிமா பிரபலங்கள் பலரும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் படத்தை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்தவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றியை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரியின் வாழ்த்து பதிவுக்கு, 'இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு' என்று சூர்யா பதிலளித்து உள்ளார். நடிகர் சரத்குமார் பதிவிட்டிருந்த வாழ்த்துக்கு 'உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் என் சார்பாகவும், ஜெய்பீம் படக்குழுவினர் சார்பாகவும் நன்றிகள் பல' என தெரிவித்துள்ளார். 

மேலும் சீமானின் வாழ்த்துக்கு பதிலளித்த சூர்யா, 'தங்களது நேரத்தை ஒதுக்கி எங்கள் திரைப்படத்தை பார்த்ததற்கு நன்றி. சட்டமும், நீதியும் ஒப்பற்ற ஆயுதங்கள் என்பதை உரக்க கூறவே ஜெய்பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டது. தாங்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார். மேலும் பலருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story