டிக்டாக், ரீல்ஸில் ஆபாச வீடியோ போடும் பெண்களை கைது செய்ய வேண்டும் - பேரரசு ஆதங்கம்


டிக்டாக், ரீல்ஸில் ஆபாச வீடியோ போடும் பெண்களை கைது செய்ய வேண்டும் - பேரரசு ஆதங்கம்
x
தினத்தந்தி 5 Jan 2022 4:47 PM GMT (Updated: 5 Jan 2022 4:47 PM GMT)

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு, ஆபாச வீடியோ போடும் பெண்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே'. இப்படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இயக்குனர் பேரரசு பேசினார்.

அவர் பேசும்போது, ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்ற படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது. அதற்கு எதிராகப் பேசுகிறது என்று சொன்னார்கள். சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

டிக் டாக், ரீல்ஸ் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் மோசமானவை. அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும்.

நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள் தான். தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது. செல்போனில் புல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும். அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.

நாடு இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை. பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியார், சாமியார், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு நாள் செய்தியாகக் கடந்து போய் விடுகின்றன - எத்தனையோ செய்திகளைப் பார்க்கிறோம், நாம் மறந்துவிடுகிறோம். பொள்ளாச்சி என்னாச்சு? இப்போது யார் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? எல்லாம் செய்தியாக கடந்து போய்விடுகின்றன’ என்றார்.

Next Story