பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்


பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய  ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 20 April 2019 7:35 AM GMT (Updated: 20 April 2019 7:35 AM GMT)

பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல்  ஆகியோர் இயக்குனர் கரண் ஜோஹர் நடத்திய டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பெண்கள் குறித்து இவர்கள் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதையடுத்து இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் அதை விலக்கி தொடர்ந்து விளையாட அனுமதித்தது. இதற்கிடையே தங்கள் பேச்சுக்கு இருவரும் மன்னிப்பு கேட்டனர்.

இதற்கிடையில் இருவர் மீதான புகார் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம் நியமித்தது. ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார். விசாரணையின் முடிவில், "ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகிய  இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வீரர்களும்,  உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும், பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக தலா ரூ.10 லட்சத்தை இருவரும் வழங்க வேண்டும். 4 வாரங்களுக்குள் இந்த தொகையை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொகையை இருவரும் டெபாசிட் செய்யாவிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் போட்டி கட்டணத்தில் இருந்து பிசிசிஐ இந்த தொகையை கழித்துக் கொள்ள வேண்டும்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story