ஐ.பி.எல். போட்டி: டெல்லி கேப்பிட்டல் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


ஐ.பி.எல். போட்டி:  டெல்லி கேப்பிட்டல் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 3 Oct 2020 6:17 PM GMT (Updated: 3 Oct 2020 6:17 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டமொன்றில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் இன்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அந்த ஜோடியில் ஷிகர் தவான் 26(16) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் பிரித்வி ஷா அரைசதம் கடந்த நிலையில் 66(41) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரைசத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யருடன், ரிஷாப் பன்ட் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அதிரடியில் மிரட்டினர். இந்த ஜோடியில் ரிஷாப் பன்ட் 38(17) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 88(38) ரன்களும், ஹெட்மயர் 7(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 88 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசூல் 2 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, நாகர்கோடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணிக்கு 229 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் (28), நரீன் (3) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ராணா அரை சதம் (58) விளாசினார்.  இவற்றில் 4 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.  ரஸ்செல் (13), கேப்டன் தினேஷ் கார்த்திக் (6) மற்றும் கும்மின்ஸ் (5) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மோர்கன் அதிரடியாக விளையாடி 5 சிக்சர்களும், 1 பவுண்டரியும் விளாசினார்.  அவர் 44 ரன்களும், திரிபாதி 36 ரன்களும் எடுத்தனர்.  இவற்றில் 3 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.  இருவரும் ஆட்டமிழந்தனர்.

நாகர்கோட்டி (3), மாவி (1) ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  போட்டி முடிவில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.  இதனால், டெல்லி கேப்பிட்டல் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Next Story