சமுதாய நலக்கூடம் கட்டும் விவகாரம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முற்றுகை


சமுதாய நலக்கூடம் கட்டும் விவகாரம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 3 May 2017 9:20 PM GMT)

சமுதாய நலக்கூடம் கட்டுவது தொடர்பான பிரச்சினையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை கோபிகா எம்.எல்.ஏ. தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மாநிலம் திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பம் இந்திராநகரில் சமுதாய நலக்கூடம் கட்ட கண்ணன் எம்.பி.யாக இருந்தபோது கடந்த 2013–ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் ஒதுக்கி இருந்தார். ஆனால் இதுவரை அங்கு சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கான டெண்டர் விடும் பணிகளும் தொடங்கவில்லை. இதற்கிடையே இந்த நிதியை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

முற்றுகை

இதுகுறித்த தகவல் அறிந்து தொகுதி எம்.எல்.ஏ.வான கோபிகா நேற்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா நகரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்துக்கு வந்து அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அரசு செயலாளர் அருண்தேசாய் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

கோபிகா எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அறிந்த செயலாளர் அருண்தேசாய் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின்போது கோபிகா எம்.எல்.ஏ. சமுதாய நலக்கூடம் கட்ட வலியுறுத்தினார்.

அப்போது அரசு செயலாளர் அருண்தேசாய், இதுகுறித்து இன்னும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்று கோபிகா எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


Next Story