தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிடக்கோரி வங்கி அதிகாரிகள்–ஊழியர்கள் வேலை நிறுத்தம்


தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிடக்கோரி வங்கி அதிகாரிகள்–ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 7:22 PM GMT)

தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிடக்கோரி வங்கி அதிகாரிகள்–ஊழியர்கள் 2,100 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோடு மாவட்டத்தில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு,

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22–ந் தேதி (நேற்று) நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின் காரணமாக நேற்று வங்கிகளுக்கு அதிகாரிகளும், ஊழியர்களும் வரவில்லை. இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது.

ஒப்பந்த முறை ஊழியர்கள் பணியாற்றும் ஒரு சில தனியார் வங்கிகள் மட்டுமே செயல்பட்டன. அங்கும் குறைவான ஊழியர்களே இருந்ததால் பண பரிவர்த்தனை போன்ற பணிகள் நடைபெறவில்லை. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் பற்றிய தகவல் தெரியாத பொதுமக்கள் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு தலைமை ஸ்டேட் வங்கி வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜோ சுகுமார், வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொதுத்துறை வங்கிகள் வலிமையாக்கப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். வங்கிகள் இணைப்பு திட்டங்களை கைவிட வேண்டும். வங்கிக்கடனை திருப்பி கட்ட மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் கூறியதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வணிக வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் 310 வங்கிகளில் பணியாற்றும் 430 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 100 பேர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் வங்கிகளில் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை என சுமார் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் போன்ற ஒரு சில தனியார் வங்கிகளில் ஒப்பந்தம் முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு சென்றனர். போராட்டத்தின் காரணமாக பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டுவிட்டன. ஏ.டி.எம். மையங்கள் உள்ள ஒரு சில வங்கிகள் திறக்கப்பட்டு இருந்தது. அங்கும் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வங்கி பணிகள் முழுமையாக முடங்கியது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story