சினிமா கவர்ச்சியை காட்டி அரசியலுக்கு வருபவர்களை மக்கள் ஆதரிக்க கூடாது கி.வீரமணி பேட்டி


சினிமா கவர்ச்சியை காட்டி அரசியலுக்கு வருபவர்களை மக்கள் ஆதரிக்க கூடாது கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2017 11:15 PM GMT (Updated: 21 Oct 2017 9:50 PM GMT)

சினிமா கவர்ச்சியை காட்டி அரசியலுக்கு வருபவர்களை பொதுமக்கள் ஆதரிக்க கூடாது என கடலூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

கடலூர்,

திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 139-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் தேரடி திடலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் தாமோதரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

1944-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசி விட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு ரிக்‌ஷாவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மஞ்சக்குப்பம் பாலத்தில் பெரியார் வரும் போது எதிர்பாராதவிதமாக விளக்குகள் அணைக்கப்பட்டன, பெரியார் மீது பாம்பும், செருப்பும் வீசப்பட்டது. 1972-ல் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருக்கும் போது, அதே மஞ்சக்குப்பம் பாலத்தின் முகப்பில் பெரியாருக்கு சிலை வைக்கப்பட்டது.

கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. ஆனால் என் மக்கள் கோவிலுக்கு போகிறார்களே அவர்களை கோவில் கருவறைக்குள் போக முடியாது என்று சொன்னால் எப்படி? என்று பெரியார் கேட்டார். எனவே தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி 2 முறை சட்ட திருத்தம் கொண்டு வந்தார். ஆனால் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு, அங்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் என்ற அரசாணையை கொண்டு வந்து ஆதிதிராவிடர்களை அர்ச்சகராக நியமித்து அமைதி புரட்சி உருவாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்திருந்தால் இதை எப்போதோ செய்திருக்கும். சாதிக்கொடுமைகள் அதிகம் இருந்த கேரளா இன்றைக்கு கதவை திறந்து விட்டுள்ளது. கேரளாவில் இதை செய்யும் போது, தமிழகத்தில் ஏன் செய்ய முடியவில்லை. சரியான ஆட்சி கொள்கை ரீதியான ஆட்சி இருந்தால் இது நடந்திருக்கும். எனவே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வர வேண்டும்.

பெரியாரின் சமுதாய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் இயக்கம் தி.மு.க. என்று அண்ணா சொன்னார். எனவே கடலூரில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இந்த தீர்மானங்கள் தான் நாளை அரசாங்கத்தில் சட்டங்களாகும் என்பதை மறக்கக்கூடாது.

இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

முன்னதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தி.க.துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, காங்கிரஸ் சொத்து மீட்புக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் உள்ளிட்டோர் பேசினார்கள். கூட்டத்தில் துரை.சந்திரசேகரன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று காலையில் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் செயலவை தலைவர் அறிவுக்கரசு தலைமையில், துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர்கள் அன்புராஜ், துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார், அமைப்பாளர் குணசேகரன், பொருளாளர் பிறை நுதல் செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் பகுத்தறிவாளர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பது, நீட்தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், மீன்பிடி உரிமைக்கு உத்திரவாதமும் பெற்றுத்தர வேண்டும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் முழு உடல் நலம் பெற்று மீண்டும் தன் தொண்டை தொடரவேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும். பெரியார் சாதி ஒழிப்பு போராட்டம் நடத்தி 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஒத்த கருத்துள்ள, சமயத்தை சார்ந்தவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு அடுத்த மாதம்(நவம்பர்) 26-ந் தேதி சென்னை பெரியார் திடலில் நடக்கிறது. இதில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

தற்போதைய அரசு இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. சீர்காழியில் என்.எல்.சி.யின் அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டம், நீட்தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு மாநில உரிமைகளை காக்கவில்லை. மத்தியில் காவியாட்சியும், மாநிலத்தில் ஆவியாட்சியும் நடக்கிறது. இந்த 2 ஆட்சியும் நீடிக்க கூடாது.

சிதம்பரம் அண்ணாமலை மற்றும் சேலம் பெரியார் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஜோதிட பாடத்திட்டம் இடம் பெற்று இருப்பதை விலக்காவிட்டால் அதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். 10 திரைப்படங்களில் நடித்து விட்டால் உடனே சினிமா கவர்ச்சியை வைத்து முதல்-அமைச்சர் பதவியை பிடித்து விடுவோம் என்கிறார்கள். அவர்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது. அவர்களை ஆதரிக்கும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகளும் அல்ல. இதற்கு முன் சினிமா துறையில் இருந்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் கொள்கை இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story