தொழில் தொடங்குவோருக்கு பேஸ்புக், டுவிட்டர் மூலம் விழிப்புணர்வு


தொழில் தொடங்குவோருக்கு பேஸ்புக், டுவிட்டர் மூலம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 30 May 2018 12:07 AM GMT (Updated: 30 May 2018 12:07 AM GMT)

தொழில் தொடங்குவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக சமூக ஊடக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

தொழில் தொடங்குவதகு அனுமதி வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில் துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச் சாளர முறை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து, கூடுதலாக சுகாதாரத்துறையிடமிருந்து பெறவேண்டிய தடையில்லாச் சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய உரிமம் மற்றும் மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்த மின் இணைப்பு ஆகியவற்றிற்கான சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர முறை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் மூலம் தொழில் முனைவோர் துறைகளிடமிருந்து பெற வேண்டிய உரிமங்கள் தடையில்லாச் சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் தமிழ்நாடு அரசு, இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக செயல்படுத்திவரும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டத்தின்கீழ் பயனாளிகள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட www.msmeonline.tn.gov.in/uyegp மற்றும் www.msmeonline.tn.gov.in/needs தகவு அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

தொழில் வணிகத் துறையின் திட்டங்கள் குறித்து தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக சமூக ஊடக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில் முனைவோரின் கருத்துகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து துறை அமல்படுத்தும் திட்டங்களை மாற்றியமைக்கவும் மேம்படுத்திடவும் இயலும்.

இதனை கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Next Story