மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 May 2018 12:22 AM GMT (Updated: 30 May 2018 12:22 AM GMT)

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சேலம்,

சேலம் பச்சப்பட்டி அசோக் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது43). டீ கடைக்காரர். இவரது மனைவி பத்மினி (32). இருவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீதர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்து இருந்தார். கடந்த 14.9.2014 அன்று கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஸ்ரீதர் வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டார்.

கணவர் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்கிறாரே, இனிமேல் வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணிய பத்மினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் வெந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிச்சிபாளையம் போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரை போலீசார் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story