காயல்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.1 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை
காயல்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.1லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.1லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் கைவரிசை காட்டிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் திருட்டுகாயல்பட்டினத்தில் திருச்செந்தூர் சாலையில் கே.எம்.பி. தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி நிர்வாக அலுவலக மேலாளராக அப்துல் லத்தீப் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தை பூட்டி விட்டு மேலாளர் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அந்த அலுவலகத்துக்குள் புகுந்து உள்ளனர். பின்னர், அங்கிருந்து பீரோவை உடைத்து ரூ.1 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி கொண்டு தப்பி சென்று விட்டனர்.
போலீசார் விசாரணைநேற்று காலையில் அங்கு பணிக்கு சென்ற மேலாளர் பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகம் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு பணம், பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கைகடந்த சில நாட்களுக்கு முன்பு சாகுபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் தனியார் பள்ளிகளின் அலுவலகத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து பணத்தை திருடி சென்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மர்ம நபர்கள் இந்த ஆஸ்பத்திரியில் கைவரிசை காட்டி உள்ளனர். மர்ம கும்பல் ஒன்று இந்த பகுதியில் துணிகரமாக கைவரிசை காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தனிக்கவனம் செலுத்தி தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலை கூண்டோடு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.