கர்நாடக மந்திரிசபையில் காங்கிரசுக்கு உள்ள 6 இடங்களையும் உடனே நிரப்புமாறு ராகுல் காந்தியிடம் கூறுவேன் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி


கர்நாடக மந்திரிசபையில் காங்கிரசுக்கு உள்ள 6 இடங்களையும் உடனே நிரப்புமாறு ராகுல் காந்தியிடம் கூறுவேன் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2018 9:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:58 PM GMT)

கர்நாடக மந்திரிசபையில் காங்கிரசுக்கு உள்ள 6 இடங்களையும் உடனே நிரப்புமாறு ராகுல் காந்தியிடம் கூறுவேன் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபையில் காங்கிரசுக்கு உள்ள 6 இடங்களையும் உடனே நிரப்புமாறு ராகுல் காந்தியிடம் கூறுவேன் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

போர்க்கொடி தூக்கியுள்ளனர்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 25 மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அதிருப்தியாளர்களை சரிசெய்ய மந்திரிசபையில் காங்கிரசுக்கு உள்ள 6 காலி இடங்களை உடனே நிரப்புமாறு கூறுவேன்.

அதிருப்தியில் உள்ளவர்களுடன் எங்களுடைய கட்சி மேலிடம் பேசி, அடுத்த சில நாட்களில் பிரச்சினைக்கு தீர்வு காணும். அதிருப்தியாளர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், குலாம்நபிஆசாத் ஆகியோர் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். அதனால் ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

புறக்கணிக்கவில்லை

அதிருப்தியில் உள்ளவர்கள் கட்சிக்கு விசுவாசமானவர்கள். அவர்கள் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். கட்சியை பலப்படுத்த அவர்கள் பாடுபடுவார்கள். அடுத்த ஆண்டு(2017) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பதவி கிடைக்காத முன்னணி தலைவர்கள் கட்சியை பலப்படுத்துவார்கள். அவர்களை எங்கள் கட்சி புறக்கணிக்கவில்லை.

சுழற்சி முறையில் மந்திரி பதவி வழங்கப்படும் என்று செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறிய தகவலை நான் ஊடகங்களில் பார்த்தேன். எதுவாக இருந்தாலும் கட்சியின் நலன் கருதி மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். முதல்–மந்திரி பதவி ஆளுக்கு 30 மாதங்கள் என்றே பேச்சே இல்லை.

விட்டுக்கொடுத்து பெறுதல்

ஏனென்றால், காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகளின் ஒப்பந்தங்கள் ஏற்கனவே போடப்பட்டுவிட்டன. இதை அனைத்து தலைவர்களும் மதிக்க வேண்டியது அவசியம். சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தால் கூட்டணி ஆட்சி அமைந்திருக்காது. கூட்டணியில் விட்டுக்கொடுத்து பெறுதல் கொள்கையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.


Next Story