காதலிக்க வலியுறுத்தி பாலியல் தொந்தரவு: பள்ளி மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி 2 பேர் கைது


காதலிக்க வலியுறுத்தி பாலியல் தொந்தரவு: பள்ளி மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2018 11:30 PM GMT (Updated: 20 July 2018 7:35 PM GMT)

ஓமலூர் அருகே காதலிக்க வலியுறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பள்ளி மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இது தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இந்த மாணவிகள் தினமும் பள்ளிக்கு சென்று வரும் வழியில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் செல்வமணி (வயது 21), ஆறுமுகம் மகன் துரைமுருகன் (20) ஆகிய 2 பேர் கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் 2 பேரும் மாணவிகளிடம் காதலிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். ஆனால் மாணவிகள் காதலிக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர். இதன் காரணமாக மாணவிகள் அச்சம் அடைந்தனர். அவர்களிடம், மாணவிகள் எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சி உள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்து, மாணவிகளை தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி உள்ளனர்.

தினமும் 2 பேரும் மாணவிகளை காதலிக்க வற்புறுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததால், அவர்கள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். இதனிடையே நேற்று முன்தினம் காலை வழக்கம் போல மாணவிகள் 2 பேரும் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். அப்போதும் அவர்கள் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவிகள் 2 பேரும் பள்ளிக்கு பின்புறம் வைத்து சாணிப்பவுடர் (விஷம்) குடித்து விட்டு வகுப்பறைக்கு சென்றனர்.

இதையடுத்து வகுப்பறையில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆசிரியர்கள் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது தான் மாணவிகள், 2 பேர் தங்களை காதலிக்க வற்புறுத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் நேற்று காலை தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் செல்வமணி, துரைமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் செல்வமணி பெயிண்டர் வேலை செய்து வந்ததும், துரைமுருகன் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story