நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடி : 2 பேர் கைது


நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடி : 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sep 2018 11:35 PM GMT (Updated: 8 Sep 2018 11:35 PM GMT)

மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் உள்ள குயிக் டெக்னாலஜி என்ற நிதி நிறுவனம் தன்னிடம் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு மாதம் 10 சதவீதம் வட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தது. இதை நம்பிய பலர் அந்த நிதி நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் பணத்தை முதலீடு செய்து உள்ளனர்.

ஜூலை மாதம் வரை வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் வட்டி தொகையை கொடுத்து உள்ளது. அதன்பின்னர் கொடுக்கவில்லை. இதுபற்றி வாடிக்கையாளர்கள் கேட்ட போது, அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சரியாக பதில் அளிக்க வில்லை.

இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் சாக்கிநாக்கா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த நிதி நிறுவனத்தின் துணை தலைவர் சுமித் கைலாஷ் சர்மா (வயது30), நிர்வாக அதிகாரி சுமைல் கான் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மாதந்தோறும் வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.27 கோடி வரை பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்கு ராகுல் சக்சேனா என்பவர் தான் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story