வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - அரசூரில் கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - அரசூரில் கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2018 11:30 PM GMT (Updated: 7 Oct 2018 9:38 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

அரசூர்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அரசூர் பகுதியில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1-1-2019-யை தகுதி ஏற்பு நாளாக கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க, திருத்தப்பணிகள் கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 7-ந்தேதி சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 227 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை வட்டம் அரசூர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு 18 வயது பூர்த்தியான இளைஞர்கள், இளம்பெண்கள் படிவம் 6-யை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினர். அவர்களிடம் சரியான முறையில் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா? என்று படிவத்தை வாங்கி கலெக்டர் பார்வையிட்டார். இதேபோல் பிடாகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உளுந்தூர்பேட்டை வட்டம் பேரங்கியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இருவேல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மடப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை யும் கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல், உதவி ஆணையர்(கலால்) ராமு, தாசில்தார்கள் சையத்மெகமூத், இளங்கோ, அரசூர் வருவாய் ஆய்வாளர் லோகநாயகி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story