நிலத்தை அளப்பதற்கு லஞ்சம்: துணை சர்வேயருக்கு 2 ஆண்டு ஜெயில் தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


நிலத்தை அளப்பதற்கு லஞ்சம்: துணை சர்வேயருக்கு 2 ஆண்டு ஜெயில் தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Nov 2018 9:30 PM GMT (Updated: 27 Nov 2018 11:56 AM GMT)

நிலத்தை அளப்பதற்கு லஞ்சம் வாங்கிய துணை சர்வேயருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி, 

நிலத்தை அளப்பதற்கு லஞ்சம் வாங்கிய துணை சர்வேயருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

துணை சர்வேயர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 42). இவர் கடந்த 2011–ம் ஆண்டு மானாடு தண்டுபத்து கிராமத்தில் 6½ சென்ட் நிலம் வாங்கினார். அந்த நிலத்துக்கு கூட்டுப்பட்டா இருந்தது. இதனால் அய்யப்பனும், பக்கத்து நிலத்தை சேர்ந்த அமல் அந்தோணி ஸ்ரீமேனும் தனிப்பட்டா பெறுவதற்கு முயன்றனர். இதனால், 2 பேரும், உடன்குடி பிர்க்கா துணை சர்வேயராக பணியாற்றி வந்த நாகர்கோவில் நயினார்புதூரை சேர்ந்த வரதராஜன் என்பவரிடம் நிலத்தை அளந்து கொடுக்குமாறு கூறினர். அதற்கு வரதராஜன், 2 பேரும் தலா ரூ.3 ஆயிரம் பணம் கொடுக்குமாறு கூறினார்.

2 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 18–8–2011 அன்று திருச்செந்தூரில் வைத்து வரதராஜன் பணத்தை வாங்கும் போது, போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் குற்றம் சாட்டப்பட்ட வரதராஜனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜர் ஆனார்.


Next Story