கோவை அரசு ஆஸ்பத்திரியில்: வைரஸ், டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பலி


கோவை அரசு ஆஸ்பத்திரியில்: வைரஸ், டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 10:44 PM GMT)

கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ், டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள்.

கோவை,

கோவையில் கடந்த சில மாதங்களாக டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

வடமாநிலத்தை சேர்ந்தவர் குருதீப். இவர் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருடைய ஒருவயது குழந்தை சோனா. இந்த குழந்தை வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த 10-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை சோனா பரிதாபமாக இறந்தது.

கோவை கணபதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் காரணமாக அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் கடந்த மாதம் 28-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரியை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதன் மூலம் கோவையில் இந்த ஆண்டு இதுவரை டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 90 பேர் இறந்து உள்ளனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 40 பேரும் என மொத்தம் 60 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story